விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

எனது இரவுகளுக்கு சிறகுக்குள் முளைத்து
பல நாட்கள் ஆகிவிட்டன !

ஆனாலும் அவை இதுநாள்வரை
பறக்க முயற்சித்ததில்லை !

உந்தன் அறிமுகத்திற்கு பிறகோ அவை
பறப்பதை நிறுத்தவே இல்லை !

இப்பொழுதும்கூட அவைஎன் உறக்கத்தை
திருடிக்கொண்டு வந்து உன்னிடம்
கொடுத்துக்கொண்டிருக்கிறது பார் !

எனக்கும் சேர்த்து நீயாவது தூங்கு…
உனக்கும் சேர்த்து விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

இதயத்தை பாதிப்பதில்

ஒவ்வொரு முறை அலைப்பேசி
அழைக்கும் பொழுதும் உன்
குரலை எண்ணியே செவியில்
வைக்கிறேன் ஏமாற்றம் தான்.
யாரேனும் என்னிடம்
அலைபேசியில் பேசும் பொழுது
கூட ஒருவேளை
இந்த நொடி நீ என் அலை பேசிக்கு
தொடர்பு கொள்ள முயற்சித்தால்…
என்று உன்னையே நினைத்து
வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறேன்
அவர்கள் சிக்கிரம் வைக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டே…
அலைப் பேசியை எங்கேனும்
வைத்துவிட்டு செல்ல கூட
பயமாக இருக்கிறது
குளிக்கும் பொழுதும்,இன்னும்
சில வேளைகளிலும் உன் அழைப்பு
வநது விட கூடாது என்று
வேண்டிக்கொள்கிறேன்
வேறு யாரேனும் எடுத்து விட்டால்…?
இருப்பினும் அப்படி ஒரு முறையும்
நிகழவில்லை.ஒவ்வொரு நொடியும்
இப்படி என்னை அலைபேசி நோக்கியே
சிந்திக்க வைத்த உன்
அந்த முதல் அலைப்பேசி அழைப்பு நிகழாமலே
இருந்திருக்கலாம் என்னசெய்வது
நிகழ்ந்து விட்ட அந்த அழைப்பை
நோக்கியே மனம் மீண்டும் மீண்டும்
நிகழாதா? என்று நிகழாத அழைப்பிற்காக துடிக்கிறது
என் துடிப்பு உனக்கும் புரியவில்லை
இந்த அலைபேசிக்கும் புரியவில்லை
உன் குரலை தவிர மற்ற
எல்லோர் குரலையும்
என் காதில் ஒலிக்கச் செய்கிறது
தூக்கி எரிந்து விடவும் மனசில்லை
உன் நினைவுகளை போல…
இரண்டையும் சுமக்கிறேன்
என்நெஞ்சிற்கு அருகில் வைத்து
இரண்டிற்கும் இதயத்தை
பாதிக்கும் சக்தி அதிகமாம்!
என்றாவது ஒரு நாள் உன் குரல்
ஒலிக்கும் பொழுது தெரியும்
எதற்கு சக்தி அதிகம் என்று…?
இதயத்தை பாதிப்பதில்…

குழந்தைத் தனம் தான் நட்பா?

கொஞ்ச நேரமே பார்க்க நேர்ந்தாலும்
அந்த அரிதான நொடிகளை
மனம் அழகாய் ரசிக்கப் பழகிவிட்டது
சந்திப்புகளில் மட்டுமே திருப்தியடைந்த
மனம் இப்பொழுதெல்லாம்
சந்திப்பில்லாத கணங்களிலும்
நட்பால் திருப்தியடைகிறது
பார்த்து பார்த்து பழகிய வயது
போய் ,பார்வைகளின்றியும்
நட்பின் பகிர்தலை உணர்த்தும்
உனதான என் நட்பில்…
கொஞ்சம் பக்குவம் தெரிந்தாலும்
அழும் குழந்தையாகவே என் மனம்
கேட்கிறது.
இப்பொழுதும்
திரும்பவும் சந்திக்கும் தருணங்களை…
இது நட்பின் குழந்தைதனமா?
இல்லை
குழந்தைத் தனம் தான் நட்பா?